Wednesday, December 29, 2010

மூணு பேரு மொபைல் வாங்கப் போன கதை...1

விஜ்ஜு: டேய் புலி….என்ன மொபைல் வாங்கறதுன்னு முடிவு பண்ணிட்டியா?! 
எழில்: பண்ணியாச்சு மச்சி…. ஆனா...(யோசித்துக்கொண்டே)காசுதான் கொஞ்சம் கொறைவா இருக்கு….(கொஞ்சம் கிண்டலாக..)நீ கொஞ்சம் உதவிக்கரம் நீட்டுறது!?
விஜ்ஜு:(கிண்டலாக சிரித்துக்கொண்டே) டேய்…. உனக்கு இல்லாததா?!அதுசரி என்ன மொபைல்!?ஆப்பிள்-ஆ இல்ல...ப்ளாக்பெர்ரியா?! என்னலே முடிவுபண்ணிருக்க?!
எழில்:ம்ம்ம்..(முறைத்துக்கொண்டே) ஆப்பிள் இல்லடா....... ஆரஞ்சு....இல்லைனா வாழைப்பழம்.... வாங்கலாம்னு இருக்கேன்....வெளக்கெண்ண .. 
விஜ்ஜு:(இன்னும் அதிகமாக சிரித்துக்கொண்டே)....டேய்...புலி....இப்ப ஏன் டென்ஷன் ஆகுற....காசுதான வேணும்? எவ்ளோ வேணும்னு சொல்லு.
எழில்: (முறைத்துக்கொண்டே)ஏன் சுடச்சுட பிரிண்ட் பண்ணி தரப்போறியா?!...(உடனே சமாதானமாகி...) டேய் வெண்ண... நெஜமாவே காசு வேணும்டா வெண்ண....உங்கிட்ட எவ்ளோ இருக்கு இப்ப?!
பொற்கோ(சிரித்துக்கொண்டே): ஏங்க…. விஜயன்கிட்ட கேட்டா கிட்னிய கூட வெட்டி வித்து காசு கொடுப்பாப்ல…நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க..அவர கேளுங்க கூச்சப்படமா…எத்தன கோடி வேணும்,சொல்லுங்க….விஜயன் தருவாப்ல...
எழில்:(நக்கலாக..) கிட்னிய வித்தா?!யோவ், உனக்கு மேட்டர் தெரியாதா? அவனுக்கு கிட்னி ஸ்டோன் ஒரு கிட்னில மட்டும் ஏன் வந்துதுன்னு தெரியுமா தெரியாதா?
பொற்கோ(சிரித்துக்கொண்டே):ஏங்க?
எழில்(சீரியஸாக): அவனுக்கு சின்ன வயசுல ஒரு சொறி நாய் கடிச்சதுல பாய்சனாகி இன்னொரு கிட்னி அழுகிப் போச்சு...
பிரபாகரன்(சிரித்துக்கொண்டே):யோவ்…அது மட்டுமா.. போன மாசம்தான்யா எனக்கு ஒரு கண்ண புடுங்கி கொடுத்தான்…அவனோட வலதுகண்ணு கழுதைக் கண்ணு….ஒரிஜினல் மனுஷக்கண்ணு இல்ல,தெரியுமா?
பொற்கோ:ஹ ஹா ஹாஹ்...ஏய் பொறு…ஆமா போன மாசம் நீ எதுக்கு காசு வாங்கின?
பிரபா:வேற எதுக்கு…(எழிலை பார்த்து,நமுட்டு சிரிப்போடு) "நம்ம" மாம்பழத்துக்கு சுடிதார் வாங்கி கொடுக்கத்தான். ;)
பொற்கோ: யோவ்...என்னது..."நம்ம" மாம்பழமா?!...அது எப்ப இருந்து "நம்ம" மாம்பழமா ஆச்சு...?!
விஜ்ஜு: சுடிதார் மட்டும்தானா…..?!?!?....இல்ல…. வேற ஏதும் இல்லையே?!?! (நமுட்டு சிரிப்போடு எழிலை பார்க்கிறான்)
பொற்கோ:(சிரிப்புடன்) ஏங்க(எழிலை பார்த்து)பாருங்க....மாம்பழம் உங்க ஆளுன்னு தெரிஞ்சும் எப்டி பேசுறான் பாருங்க…உங்களுக்கு கோவம் வரலையாங்க? இதையெல்லாம் தட்டி கேக்க மாட்டீங்களாங்க?
எழில்:அட போயா...என்னமோ அவ வந்து என்கிட்ட டெய்லி கொஞ்சிட்டு போறமாதிரி... என்னோட ஆளுன்னு சொல்ற….?
இடை மறித்து….
பொற்கோ:யோவ் பிரபா….என்ன இன்னிக்கு dutyக்கு போகலையா?!?! அங்க பாரு shiftbus வந்துடுச்சு…. மறந்து போய் எங்களோட வந்துறப் போற…கெளம்பு…கெளம்பு….
பிரபா(எரிச்சலுடன்..): ஐயோ….இவனுங்க எதுக்குதான் கரெக்ட் டைம்க்கு வந்து தொலைக்கரானுன்களோ தெரியல…(விஜ்சுவிடமிருந்து சிகரெட்டைப் பிடுங்கிக்கொண்டே…)….ங்கொய்யால …இங்க குடுக்க மாட்ட நீ…. வண்டி இங்க வரதுக்குள்ள ரெண்டு puff இழுத்துட்டு தரேன்யா….நீயே புடிச்சு உறிஞ்சினு இருக்க?!..
அவசர அவசரமாக இழுக்க ஆரம்பித்து,வண்டி வரவும் சிகரெட்டோடு ஓடிச்சென்று ஏறிக்கொண்டான்.
விஜ்ஜு(சத்தமாக):டேய்...கேண... கொடுத்துட்டு போடா.. சிகரெட்ட வச்சி வண்டிய கொளுத்தவா போற?
பிரபாகரன்(சிரித்துக்கொண்டே): வந்து உன்ன கொளுத்தரேண்டி...
பஸ் போய்விட...சிகரெட்டுக்கும் டீக்கும் காசு கொடுத்துவிட்டு ரயில்வே ஸ்டேஷனை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்...


இந்த கூட்டத்தைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்... விஜ்ஜுவும் எழிலும் கிளாஸ்மேட்ஸ்...பொற்கோ எழிலோட ஸ்கூல் ஜூனியர்...பிரபா விஜ்ஜு-எழிலோட காலேஜ் ஜூனியர்...இது தவிர இவங்க கூட்டத்துல சக்கு(சக்கரவர்த்தி), சிங்கம்(ராஜன்), முருகன், ரெட்டி(இந்திர சேனா ரெட்டி)ன்னு சிலர்வேற இருக்காங்க... சக்கு, ரெட்டி விஜ்ஜு- மூணுபேரும் எழிலோட கிளாஸ்மேட்ஸ். இந்த மொத்த கூட்டமும் ispat என்ற இரும்புக்கடைல, எஞ்சினீயர்ங்கற பேருல குப்பை அள்ளிட்டு இருக்காங்க....ஆனா வெளிய கேட்டா LN.மிட்டல் தம்பி கம்பனிதான் ispat industries. அங்க "வேலை" பாக்குறோம்னு சொல்லுவானுங்க. இங்க நவி மும்பைல ஒரு suburban பேரு பன்வேல்....அதுல நியூ பன்வேல்ங்கற ஏரியால sertor -15 ல கௌதம் அபார்ட்மென்ட்ல 3 ப்ளாட்ல இருக்கானுங்க..2 பெட்ரூம் ப்ளாட்ஸ்... 


போனவாரம் எழிலோட மொபைல் தண்ணில விழுந்து கெட்டுப்போனதால(சாக்கடைல விழுந்து கெட்டுப்போச்சா ...!?!? இல்ல... கக்கூஸ்ல விழுந்து கேட்டுப்போச்சானு இன்னும் ஆராய்ச்சி நடந்துட்டு இருக்கு...பலர் பல விதமா சொல்றாங்க ;-) )புது மொபைல் வாங்கணும்னு முடிவு பண்ணி அட்வைஸ் பண்ணவும் ஐடியா கொடுக்கவும் ஒரு கூட்டம் சேர்த்து "வாஷி"ங்கற இன்னொரு ஏரியாவுக்கு படை எடுத்துத்துட்டு இருக்கான். இவனுங்க அபார்ட்மென்ட் ரயில்வே ஸ்டேசன்ல இருந்து ஒரு 5 நிமிஷ நடைதான்...அதுக்கு முன்ன ஒரு டீ அடிச்சிட்டு ரிலாக்ஸ்டா ரயில் ஏறலாம்னு நட்டு(நடராஜ்) டீ கடைல டீ, தம் அடிச்சிட்டு இருக்கும்போதுதான் நாம இவனுங்க பேசுறத ஒட்டுக்கேட்டோம்... ஒட்டுக்கேக்குறது தப்பில்லையான்னு யாராவது கேட்டா... "இவனுங்க என்ன பேசிடப்போறானுங்க.... ராணுவ ரகசியமா?! இல்ல சதித் திட்டமா?! ஒரு மண்ணும் கெடையாது... இதை ஒட்டுக் கேட்டா கொஞ்சம் டைம் பாஸ் ...இல்ல டைம் வேஸ்ட் ஆகுமே தவிர...வேற ஒரு தப்பும் ஆகாது"ன்னு நெறைய பேருக்கு சொல்லாமலே தெரியும்.


ஸ்டேஷன் போகும்போதே வம்புக்கதை, வெட்டிக்கதை நெறைய பேசிட்டுதான் போறானுங்க...ஆனா காற்று கொஞ்சம் அதிகமா வீசுறதால என்ன பேசிக்கரனானுங்கனு சரியா, தெளிவா கேக்கமாட்டேங்குது...எழில ஏதோ ஓட்டிட்டே போறமாதிரி தெரியுது.... 

No comments: