Monday, February 28, 2011

பயணம்-1 - திருவாரூர் நோக்கி...

பிப்ரவரி 23ல் நமது வகுப்புத் தோழன் பிரவீனின் திருமணம் திருவாரூரில் நடந்தது. நானும் கலந்துகொள்ளச் சென்றேன். திருவாரூருக்கு எனது முதற்பயணம் என்பதாலும் இந்த இணையப் பதிவலைப் பக்கத்தில் எழுத ஏதேனும் விஷயம் கிடைக்க வேண்டும் என்பதாலும் இந்தப் பயணத்தில் சிலபல புகைப்படங்களையும் வீடியோ காட்சிகளையும் எடுத்து வைத்துக் கொண்டேன். அவைகளை ஹ்ம்ஹ.ஹ்ம்ஹ... அடுத்த பதிவில் இடலாம் என்று இருக்கிறேன். என்னுடைய மாமனார் வீட்டில் இருக்கும் கணினி (512 MB DDR -1 RAM , P-IV 2.8 GHz) என்னுடைய காமெராவை சப்போர்ட் செய்யவில்லை... இந்தச் சிறு பதிவை எழுதுவதற்குள் 17 முறை இணையத் தொடர்பு அறுந்ததும் காரணம். விசாகப்பட்டினம் சென்றதும் பயணம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன். அதுவரை பார்வையாளர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைக் கூறி விடைபெறுகிறேன்.

Friday, February 11, 2011

found...

a line...


                            Here walks away                            
                                .......my soul.                                                      

குறுந்தொகையில்...3 / romeo-juliet

i think directly feeding very long english texts of romeo-juliet could make reading a  tedious experience, and when people come here for relaxing, our writing should be entertaining i guess. so.... i decided to remove that text and put it else where.
http://neidhal2.blogspot.com/2011/03/3-romeo-juliet.html

ultimately.... why we had given the text is....to make readers understand how a beautiful, tender, tenacious, all-consuming, self-effacing, wonderful TRUE (though immature) love develops between strangers on their first meeting.... to defend that love at first sight is not just a fanciful idea. we would be very happy if you could share your thoughts on this. goodtimes.bye

குறுந்தொகையில்...2


 "என் தாயும் உன் தாயும் யார் யாரோ! ஒருவரை ஒருவர் அறியார்.
   என் தந்தையும் உன் தந்தையும் எவ்விதத்திலும் உறவினர் அல்லர்.
   நானும் நீயும் ஒருவரை ஒருவர் இதுவரை பார்த்ததில்லை, சந்தித்ததில்லை.
   ஆனாலும்....
   கோடை வெப்பத்தால் காய்ந்து புழுதியாகிப்போன செந்நிற நிலத்திலே பெய்த மழை                                போல,
   நம் இருவரது அன்புள்ளமும் கலந்ததே நமது காதல் வாழ்வு." 

              இப்பாடலின் நேரடிப் பொருள் விளக்கம் எளிதானதே. ஆனால் அது நேராகக் குறிப்பிடாமல் குறிப்பால் உணர்த்தப்படும் பொருள் பல பொதிந்து இருப்பதை சாமி.சிதம்பரனாரின் விளக்கம் தெளிவுபடுத்தியது.
              குறிஞ்சி நிலமோ முல்லை நிலமோ.... எங்கோ ஒரு தனித்த இடத்தில் காதல் தலைவியும் தலைவனும் சந்திக்க நேரிடுகிறது. வழக்கமாக இலக்கியத்தில் வரும் காட்சிகளைக்கூட நாம் கற்பனை செய்து கொள்ளலாம். நீரெடுக்கச் சென்ற பெண்ணையோ...அல்லது நீராடவோ அல்லது மலர் பறிக்கவோ...அல்லது விறகெடுக்கவோ ... அல்லது தோழியருடன் காற்று வாங்கவோ... விளையாடவோ தலைவி ஊரைவிட்டு வெளியே வர நேர்கிறது... அங்கு அவளைத் தலைவன் காண்கிறான். இருவரும் முதன்முறையாக ஒருவரை ஒருவர் சந்திக்க நேரிடுகிறது. காட்டுக்கு வேட்டையாட வந்த பக்கத்து ஊர்க் காரனாக இருக்கலாம் தலைவன்.
தற்செயலாகத் தலைவியைச் சந்திக்க நேர்கிறது. கண்டதும் காதல் கொள்கிறான் தலைவன். தலைவிக்கும் தலைவனிடம் விருப்பமிருப்பது தெரிகிறது. ஆனாலும் பிடிகொடுத்துப் பேச மறுக்கிறாள். தன் மேல் நம்பிக்கை வரவில்லையோவெனத் தலைவன் சிந்திக்கிறான். அவளது அச்சத்தை அறிந்து, அதன் காரணத்தையும், அவள் பக்கமுள்ள நியாயத்தையும் புரிந்து கொண்டு, அவளது அச்சத்தைப் போக்கும் விதமாக, தலைவன் கூற்றாக இப்பாடலை அமைத்துள்ளார் புலவர்.

                காதலரின் தாய் தந்தையர் ஒருவரை ஒருவர் அறியார். காதலருக்கும் இதுவே முதற்சந்திப்பு. ஆனாலும் ஒருவர் மேல் ஒருவர் விருப்பமும் அன்பும் கொண்டு மணம் செய்துகொள்ள முடிவு செய்கின்றனர். தலைவன் தலைவிமேல் கொண்ட காதல் எப்படிப் பட்டதென்றால், நீண்ட கொடைவேப்பத்தால் வறண்டு வெடித்துப்போன...அல்லது புழுதியாகக் கூட மாறிப்போன செம்மண் நிலத்திலே கோடைமழை பெய்ய, மழைநீர் சிறு வெள்ளமாக மாறி ஓடுகிறது.
                  "பெய்யும்போது நிறமற்று இருக்கும் மழைநீர், காய்ந்த செம்மண் நிலத்திலே விழுந்ததும், தன் இயல்பை மாற்றிக்கொண்டு, தன் இயல்பையே இழந்து, எச்செம்மண் நிலத்தில் வீழ்ந்ததோ அச்செம்மண்ணின் நிறத்தைப் பெறுகிறது. நானும் அந்த மழைநீர் போல, எப்போது உன்னைக்கண்டேனோ அப்போதே என்னை முற்றிலும் உன்னிடம் இழந்துவிட்டேன். அந்த நிலமும் மழைநீரும் போல நம் இதயங்களும் கலந்துவிட்டன. எனவே நம் காதல்மேல் சந்தேகம் கொண்டு வருந்தவேண்டாம்." என்று தலைவன் கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது பாடல். சங்கத்தமிழரின் காதலறம் கூறும் கவிதை வரிகள் இவை.
                  காதலில் தன்னையே இழப்பதுதான் மிகச்சிறந்த உண்மையான காதலாக இருக்கும். தன் தனித்துவம், தன் தனிப்பட்ட சிந்தனை, தன்னைப் பற்றிய தன் நலன் பற்றிய சிந்தனைகள் இவை அனைத்தும் கடுகளவும் காதலரின் சிந்தனையில் தோன்றாமலே போய்விடுவதுதான் சிறந்த காதலாக இருக்கும். மழைநீர் தன் இயற்கைக் குணத்தை இழப்பதாகக் காட்டப்பட்டுள்ளது காதலின் சிறப்பைத் தெளிவுபடுத்தவே.

                இதே போன்ற, தன்னைப் பற்றிய சுய நினைவையே இழக்க வைத்துவிடும் காதற்காட்சி ஒன்று ஆங்கில இலக்கியத்திலும் கண்டேன்.

ரோமியோ - ஜூலியட்டில் ஒரு காட்சி.

காதலில் தனைமறந்த நிலையில் காதலர் இருவரும் பேசிக்கொள்ளும் காட்சி இது.
http://neidhal.blogspot.com/2011/02/3-romeo-juliet.html

நன்றி: புகைப்படமும் ஓவியமும் தந்தோருக்கு.

Wednesday, February 9, 2011

குறுந்தொகையில்...1

                  "யாயும் ஞாயும் யாரா கியரோ!                                     
                   எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளிர்?            
                   யானும் நீயும் எவ்வழி அறிதும்?                                  
                   செம்புலப் பெயல் நீர்போல
                   அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே."                     
                                                   - பாடல் எண் : 40 , குறுந்தொகை. 

                நேற்று "தூது" குறித்து எழுதிய பின், தூது இலக்கியம் குறித்து என்னுடைய புத்தகத் தொகுப்பில் கொஞ்சம் தேடிக்கொண்டிருந்தேன். சாமி.சிதம்பரனார் எழுதிய "எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்" மற்றும் "பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்" என்ற புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தேன். தூது குறித்துப் பெரிதாகக் குறிப்பிடத்தக்க செய்திகள் ஏதும் அவைகளில் கிடைக்கவில்லை. ஆனால்.... "எட்டுத் தொகை" நூல்களில் ஒன்றான  "குறுந்தொகை" குறித்த செய்தி எனது கவனத்தைக் கவர்ந்தது. அதற்கு முக்கியக் காரணம் ஒரு பாடல் "இருவர்" திரைப்படத்தில் இடம் பெற்றதால் இருக்கலாம். பல்லாயிரம் பழம்பாடல்களுக்கு நடுவே, இந்தப்பாடல் மட்டும் இத்தகைய ஆர்வத்தைக் கிளப்பியிருக்க வேறு காரணம் இருக்க வாய்ப்புக் குறைவே.


               இந்தப் பாடல் குறித்து எனது கருத்தையும், இதில் காதல் குறித்துக் கூறப்பட்டுள்ள செய்தியையும், இதே போன்ற காதற்கருத்து ஆங்கில இலக்கியத்தில் காணக் கிடைப்பது பற்றியும் அடுத்த பதிவில் எழுதலாம் என்று இருக்கிறேன்.



Monday, February 7, 2011

தூது.

               இரண்டு நாட்களுக்கு முன் என்னுடைய கணினியிலுள்ள பாடல்கள் தொகுப்பிலிருந்து சில பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது "தூறல் நின்னு போச்சு" படத்தில் இடம்பெற்ற "ஏரிக்கரைப் பூங்காற்றே..." எனத்தொடங்கும் பாடலைக் கேட்டபோது தமிழ்த் திரையுலகம் எத்தனை அருமையான பாடல்களைத் தந்துள்ளது என்பதும், இப்படிப்பட்ட பாடல்கள்தான் பாமரரும் கேட்டு மகிழ்வுறும்வண்ணம் மிக மிக எளிமையாக அமைந்து, மிகப் பெரும்பான்மை மக்களைச் சென்றடைந்தன என்பதும் என் நினைவில் வந்து சென்றது. அந்தப் பாடலில் எளிய தமிழும் இனிய இசையும் எத்தனை இயல்பாக உடலும் உயிரும்போல் இணைந்துள்ளன என்ற எண்ணம் தவிர்க்கமுடியாமல் வந்து சென்றது.

               கர்நாடக/இந்துஸ்தானி சங்கீதமோ நல்ல தமிழறிவோ இல்லாத எனக்கு இந்தப் பாடல் தந்த இனிய உணர்வு, தமிழின் சிறப்பையும் இசைஅறிவின் தேவை இன்மையையும் உணர்த்தியது. எனக்கு கொழுக்கட்டை சமைக்கத் தெரியாவிட்டாலும், நன்றாகத் தின்னத் தெரியும். சுவையை அனுபவிக்க, தின்னத் தெரிந்தால் போதாதா?! அதே போல யார் செய்த கொழுக்கட்டை மிகச் சுவையாக உள்ளது...யார் செய்த கொழுக்கட்டை  குப்பைக்கூடைக்குப் போகவேண்டும் என்பதை, சுவையை வைத்து நானேதான் முடிவு செய்து கொள்வதுண்டு. சமையல் குறிப்பைத் தெரிந்து கொண்டு நானென்ன சமையல் காரனாகவா போகிறேன்?! இசையின்பத்தை அனுபவிக்கத் தெரிந்தால் போதாதா?! எந்த ராகம் என்பதும் என்ன தாளம் என்பதும் தெரிந்து என்ன செய்யப் போகிறேன். இசையும் பாடல்வரிகளும் இரசிக்கத் தக்கவையாக இருந்தால் போதும். இது ஒருபுறம் இருக்க....., "ஏரிக்கரைப் பூங்காற்றே..."வில் கதாநாயகன் திரு.பாக்யராஜ் அவர்கள் ஊடலில் பிரிந்திருக்கும் தன் நாயகிக்கு செய்தி சொல்ல விரும்பி தென்றல் காற்றை "தூது" அனுப்புவதாகப் பாடல் எழுதப்பட்டிருக்கும்.

(இந்தப் பாடலை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தவருக்கு என் நன்றி.)

               இது தவிர "உயிருள்ள வரை உஷா" படத்தில் இடம்பெற்ற "வைகைக் கரைக் காற்றே நில்லு..." என்ற பாடலில் வைகைக் காற்று தூதாக அனுப்பப்படுகிறது.
(நன்றி: பதிவாளருக்கு)

               எம்.ஜி.ஆர். நடித்த, எனக்குப் பெயர் தெரியாத, ஒரு படத்தில் ஒரு தூதுப் பாடல் இடம்பெற்றுள்ளது. " போய் வா நதி அலையே...இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா..." எனத்தொடங்கும் பாடலது.
        
               முதல் இரண்டு பாடல்களில், கதைத் தலைவர்களின் "சோகத்தைத்" தலைவிக்குச் சொல்லவே "தூது" அனுப்பப்படுகிறது. இந்தப் பாடல்கள் மிக மிகச் சிறப்பாக அமைந்து பலருக்கும் பிடித்தமான பாடல்களாக அமைந்தது 80களிலிருந்து பாடல்களைக் கேட்டு வருபவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். எம்.ஜி.ஆரின் பாடல் அவ்வளவாக நம்மைக் கவரவில்லை.

               பலவகையான உணர்வுகளை வெளிப்படுத்த உபயோகப்படுத்தப் பட்டிருந்தாலும், எனக்கென்னவோ "தூது" என்பது சோகத்தைச் சொல்லத்தான் மிகப் பொருத்தமான நுணுக்கமாகத் தோன்றுகிறது. ஏனெனில், 96 வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்றான தூது, அதன் தேவை ஏற்படும் சூழ்நிலையைப் பொறுத்து, அதன் தேவையின் பின்புலத்தைப் பொறுத்துப் பார்த்தால் எனக்கு அவ்வாறு எண்ணத் தோன்றியது. தூது இலக்கியத்தின் தோற்றம், தலைவி தலைவனிடம் தன் காதலை வெளிப்படுத்தப் பிறந்தது. தொலைவோ, நேரில் கூறப் பயமோ காதல் வயப்பட்ட தலைவிக்குத் "துன்பம் தர",  தான் கூற இயலாததால், அதைக் குறிப்பால் தெரிவிக்கத் "தூது" தேவைப்படுகிறது. தான் நேரில் கூற இயலாத நிலை இயற்கையாகவே துன்பம் தருவதென்பது சொல்லாமலே விளங்கும்.

              இன்றும் கூடப் பலரது காதலுக்குத் தெருச் சிறுவர், தபால் காரர், மரப் பொந்து, ரோஜாக்கள், வாழ்த்து அட்டைகள், வண்ண மீன்கள், நாய்க்குட்டிகள், பேருந்து நடத்துனர், நண்பர்கள், SMS, தொலைகாட்சி நிகழ்ச்சிகள்.....உடன்பிறந்தோர்.... எனப் பலர் தூது செல்வது காதல் வயப்பட்டவர்களால் காதலை நேரில் பயமின்றிப் பதற்றமின்றிச் சொல்ல முடியாததால்தானே?!

               இந்தத் "தூது" அனுப்பும் வழக்கம் குறித்துச் சிறிது தெரிந்து கொள்ள விரும்பினேன்.ஆனாலும் எனக்கு சரியான குறிப்புகள் கிடைக்கவில்லை. எனக்கு நினைவில் தெரிந்தது நான் பள்ளிக்கூடத்தில் கற்ற ஒரு தூதுப் பாடல்...."நாரை(heron ?) விடு தூது.." அந்தப் பாடல் முழுதும் நினைவில் இல்லையென்றாலும், "நாராய் நாராய் செங்கால் நாராய், பழம்படு பனையின் கிழங்குப் பிளந்தன்ன, பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்...." என்று தொடங்குவது என்பது மட்டுமே நினைவில் உள்ளது. இந்தப் பாடல் தலைவன் தலைவியிடம்  நாரையத் தூதாக, தன் காதலைச் சொல்ல அனுப்புவதாக அமைந்ததுள்ளது என்று எண்ணுகிறேன். இந்தப் பாடலை முழுதாய்த் தெரிந்தவர்கள் யாராவது எனக்குத் தெரிவித்தால் மிக மகிழ்வேன். மீண்டும் புத்தகங்களைத் தோண்டித் துருவ எனக்கு பொறுமையோ நேரமோ இல்லை என்பது ஒரு வருந்தத்தக்க காரணம் என்றாலும், நான் பணிபுரியும் இடத்திலிருந்து எனது சொந்த ஊர் 25 மணிநேர புகைவண்டிப் பயணத் தொலைவில் இருப்பதுதான் பெரியதடை.

மேலும் எனக்குத் தெரிந்து தமிழ் இலக்கியத்தில்...தூதாகச் சென்ற சில(ர்)...
தமிழ்(தமிழ் விடு தூது),
நெஞ்சம் (நெஞ்சு விடு தூது),
கிளி(கிள்ளை விடு தூது),
வண்டு,
மயில்,
புறா,
அன்னம்,
மேகம்,
தோழி( பல பாடல்கள்... அகநானூறு முதற்கொண்டு...)...
இவை தவிர,
அமிர்தம் பிள்ளையின் "கழுதை" விடு தூது,
சீனிச் சக்கரைப் புலவரின் "புகையிலை" விடு தூது,
பின்னத்தூர் நாராயணசாமியின் "செருப்பு" விடு தூது
போன்றவையும் தூதாக அனுப்பப்பட்டுள்ளன என்பதை முனைவர்.பாக்கியமேரியின் நூல் மூலம் தெரிந்து கொண்டேன். இதில் செருப்புவிடு தூது பற்றி எங்கோ படித்த நினைவு; தமிழைத் தாழ்த்தி எவரேனும் பேசினால், அவர்களைச் சென்று அடித்துவிட்டு வரும்படி பின்னத்தூரார் அவர்கள் செருப்பைத் தூது அனுப்புவதாக அமைந்தது இந்தச் செருப்பு விடு தூது. அவரது தமிழ்ப் பற்றும் தமிழைத் தூற்றுவார் மீது அவர் கோபத்தைக் காட்டும் விதமும் விளங்குவதோடு அவை நமக்குப் புன்னகையை வரவைக்கத் தவறவில்லை.


               அதோடு......நானும்கூடத் தூது அனுப்பவேண்டும். உங்களில் யாரேனும் நல்ல வழி ஒன்றைச் சொன்னால் மகிழ்ச்சி. யாருடைய வழி எனக்கு வெற்றி பெற்றுத் தருகிறதோ அவருக்கு ஒரு பரிசும் தரலாம் என்று நினைக்கிறேன். வேறென்ன.... எட்டு ஆரஞ்சு மிட்டாயோ அல்லது 25கிராம் திருநெல்வேலி ஹல்வாவோ பரிசாகக் கிடைக்கும். பரிசை இமெயிலில் அனுப்பி வைக்க உறுதி அளிக்கிறேன்.நன்றி.