Monday, February 7, 2011

தூது.

               இரண்டு நாட்களுக்கு முன் என்னுடைய கணினியிலுள்ள பாடல்கள் தொகுப்பிலிருந்து சில பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது "தூறல் நின்னு போச்சு" படத்தில் இடம்பெற்ற "ஏரிக்கரைப் பூங்காற்றே..." எனத்தொடங்கும் பாடலைக் கேட்டபோது தமிழ்த் திரையுலகம் எத்தனை அருமையான பாடல்களைத் தந்துள்ளது என்பதும், இப்படிப்பட்ட பாடல்கள்தான் பாமரரும் கேட்டு மகிழ்வுறும்வண்ணம் மிக மிக எளிமையாக அமைந்து, மிகப் பெரும்பான்மை மக்களைச் சென்றடைந்தன என்பதும் என் நினைவில் வந்து சென்றது. அந்தப் பாடலில் எளிய தமிழும் இனிய இசையும் எத்தனை இயல்பாக உடலும் உயிரும்போல் இணைந்துள்ளன என்ற எண்ணம் தவிர்க்கமுடியாமல் வந்து சென்றது.

               கர்நாடக/இந்துஸ்தானி சங்கீதமோ நல்ல தமிழறிவோ இல்லாத எனக்கு இந்தப் பாடல் தந்த இனிய உணர்வு, தமிழின் சிறப்பையும் இசைஅறிவின் தேவை இன்மையையும் உணர்த்தியது. எனக்கு கொழுக்கட்டை சமைக்கத் தெரியாவிட்டாலும், நன்றாகத் தின்னத் தெரியும். சுவையை அனுபவிக்க, தின்னத் தெரிந்தால் போதாதா?! அதே போல யார் செய்த கொழுக்கட்டை மிகச் சுவையாக உள்ளது...யார் செய்த கொழுக்கட்டை  குப்பைக்கூடைக்குப் போகவேண்டும் என்பதை, சுவையை வைத்து நானேதான் முடிவு செய்து கொள்வதுண்டு. சமையல் குறிப்பைத் தெரிந்து கொண்டு நானென்ன சமையல் காரனாகவா போகிறேன்?! இசையின்பத்தை அனுபவிக்கத் தெரிந்தால் போதாதா?! எந்த ராகம் என்பதும் என்ன தாளம் என்பதும் தெரிந்து என்ன செய்யப் போகிறேன். இசையும் பாடல்வரிகளும் இரசிக்கத் தக்கவையாக இருந்தால் போதும். இது ஒருபுறம் இருக்க....., "ஏரிக்கரைப் பூங்காற்றே..."வில் கதாநாயகன் திரு.பாக்யராஜ் அவர்கள் ஊடலில் பிரிந்திருக்கும் தன் நாயகிக்கு செய்தி சொல்ல விரும்பி தென்றல் காற்றை "தூது" அனுப்புவதாகப் பாடல் எழுதப்பட்டிருக்கும்.

(இந்தப் பாடலை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தவருக்கு என் நன்றி.)

               இது தவிர "உயிருள்ள வரை உஷா" படத்தில் இடம்பெற்ற "வைகைக் கரைக் காற்றே நில்லு..." என்ற பாடலில் வைகைக் காற்று தூதாக அனுப்பப்படுகிறது.
(நன்றி: பதிவாளருக்கு)

               எம்.ஜி.ஆர். நடித்த, எனக்குப் பெயர் தெரியாத, ஒரு படத்தில் ஒரு தூதுப் பாடல் இடம்பெற்றுள்ளது. " போய் வா நதி அலையே...இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா..." எனத்தொடங்கும் பாடலது.
        
               முதல் இரண்டு பாடல்களில், கதைத் தலைவர்களின் "சோகத்தைத்" தலைவிக்குச் சொல்லவே "தூது" அனுப்பப்படுகிறது. இந்தப் பாடல்கள் மிக மிகச் சிறப்பாக அமைந்து பலருக்கும் பிடித்தமான பாடல்களாக அமைந்தது 80களிலிருந்து பாடல்களைக் கேட்டு வருபவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். எம்.ஜி.ஆரின் பாடல் அவ்வளவாக நம்மைக் கவரவில்லை.

               பலவகையான உணர்வுகளை வெளிப்படுத்த உபயோகப்படுத்தப் பட்டிருந்தாலும், எனக்கென்னவோ "தூது" என்பது சோகத்தைச் சொல்லத்தான் மிகப் பொருத்தமான நுணுக்கமாகத் தோன்றுகிறது. ஏனெனில், 96 வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்றான தூது, அதன் தேவை ஏற்படும் சூழ்நிலையைப் பொறுத்து, அதன் தேவையின் பின்புலத்தைப் பொறுத்துப் பார்த்தால் எனக்கு அவ்வாறு எண்ணத் தோன்றியது. தூது இலக்கியத்தின் தோற்றம், தலைவி தலைவனிடம் தன் காதலை வெளிப்படுத்தப் பிறந்தது. தொலைவோ, நேரில் கூறப் பயமோ காதல் வயப்பட்ட தலைவிக்குத் "துன்பம் தர",  தான் கூற இயலாததால், அதைக் குறிப்பால் தெரிவிக்கத் "தூது" தேவைப்படுகிறது. தான் நேரில் கூற இயலாத நிலை இயற்கையாகவே துன்பம் தருவதென்பது சொல்லாமலே விளங்கும்.

              இன்றும் கூடப் பலரது காதலுக்குத் தெருச் சிறுவர், தபால் காரர், மரப் பொந்து, ரோஜாக்கள், வாழ்த்து அட்டைகள், வண்ண மீன்கள், நாய்க்குட்டிகள், பேருந்து நடத்துனர், நண்பர்கள், SMS, தொலைகாட்சி நிகழ்ச்சிகள்.....உடன்பிறந்தோர்.... எனப் பலர் தூது செல்வது காதல் வயப்பட்டவர்களால் காதலை நேரில் பயமின்றிப் பதற்றமின்றிச் சொல்ல முடியாததால்தானே?!

               இந்தத் "தூது" அனுப்பும் வழக்கம் குறித்துச் சிறிது தெரிந்து கொள்ள விரும்பினேன்.ஆனாலும் எனக்கு சரியான குறிப்புகள் கிடைக்கவில்லை. எனக்கு நினைவில் தெரிந்தது நான் பள்ளிக்கூடத்தில் கற்ற ஒரு தூதுப் பாடல்...."நாரை(heron ?) விடு தூது.." அந்தப் பாடல் முழுதும் நினைவில் இல்லையென்றாலும், "நாராய் நாராய் செங்கால் நாராய், பழம்படு பனையின் கிழங்குப் பிளந்தன்ன, பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்...." என்று தொடங்குவது என்பது மட்டுமே நினைவில் உள்ளது. இந்தப் பாடல் தலைவன் தலைவியிடம்  நாரையத் தூதாக, தன் காதலைச் சொல்ல அனுப்புவதாக அமைந்ததுள்ளது என்று எண்ணுகிறேன். இந்தப் பாடலை முழுதாய்த் தெரிந்தவர்கள் யாராவது எனக்குத் தெரிவித்தால் மிக மகிழ்வேன். மீண்டும் புத்தகங்களைத் தோண்டித் துருவ எனக்கு பொறுமையோ நேரமோ இல்லை என்பது ஒரு வருந்தத்தக்க காரணம் என்றாலும், நான் பணிபுரியும் இடத்திலிருந்து எனது சொந்த ஊர் 25 மணிநேர புகைவண்டிப் பயணத் தொலைவில் இருப்பதுதான் பெரியதடை.

மேலும் எனக்குத் தெரிந்து தமிழ் இலக்கியத்தில்...தூதாகச் சென்ற சில(ர்)...
தமிழ்(தமிழ் விடு தூது),
நெஞ்சம் (நெஞ்சு விடு தூது),
கிளி(கிள்ளை விடு தூது),
வண்டு,
மயில்,
புறா,
அன்னம்,
மேகம்,
தோழி( பல பாடல்கள்... அகநானூறு முதற்கொண்டு...)...
இவை தவிர,
அமிர்தம் பிள்ளையின் "கழுதை" விடு தூது,
சீனிச் சக்கரைப் புலவரின் "புகையிலை" விடு தூது,
பின்னத்தூர் நாராயணசாமியின் "செருப்பு" விடு தூது
போன்றவையும் தூதாக அனுப்பப்பட்டுள்ளன என்பதை முனைவர்.பாக்கியமேரியின் நூல் மூலம் தெரிந்து கொண்டேன். இதில் செருப்புவிடு தூது பற்றி எங்கோ படித்த நினைவு; தமிழைத் தாழ்த்தி எவரேனும் பேசினால், அவர்களைச் சென்று அடித்துவிட்டு வரும்படி பின்னத்தூரார் அவர்கள் செருப்பைத் தூது அனுப்புவதாக அமைந்தது இந்தச் செருப்பு விடு தூது. அவரது தமிழ்ப் பற்றும் தமிழைத் தூற்றுவார் மீது அவர் கோபத்தைக் காட்டும் விதமும் விளங்குவதோடு அவை நமக்குப் புன்னகையை வரவைக்கத் தவறவில்லை.


               அதோடு......நானும்கூடத் தூது அனுப்பவேண்டும். உங்களில் யாரேனும் நல்ல வழி ஒன்றைச் சொன்னால் மகிழ்ச்சி. யாருடைய வழி எனக்கு வெற்றி பெற்றுத் தருகிறதோ அவருக்கு ஒரு பரிசும் தரலாம் என்று நினைக்கிறேன். வேறென்ன.... எட்டு ஆரஞ்சு மிட்டாயோ அல்லது 25கிராம் திருநெல்வேலி ஹல்வாவோ பரிசாகக் கிடைக்கும். பரிசை இமெயிலில் அனுப்பி வைக்க உறுதி அளிக்கிறேன்.நன்றி. 

1 comment:

ragothaman said...

உங்கள் "blog" இன் முலமாக நான் பயன் பெற்றேன். உங்கள் பதிவை என்னோடைய பதிவில் உபயோகித்து உள்ளேன். நன்றி

பார்க்கவும்: http://sangeethas.wordpress.com/2012/07/28/some-historical-snippets-of-bn-part-7-messengers-%E0%A4%A6%E0%A5%82%E0%A4%A4-or-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81-in-dance/