Monday, January 24, 2011

ஐந்திணை ஐம்பதில் காதல்...2

ஐந்திணை ஐம்பதுப் பாடல் ஒன்றை நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.அந்தப் பாடல் விவரிக்கும் காட்சியைப் பற்றிச் சிறிது விளக்கிவிட்டால் பாடலைப் புரிந்து கொள்வது மிக மிக எளிதாக இருக்கும் என்பதால்....கவிதை காட்டும் காட்சியின் பின்புலத்தைச் சற்று கற்பனை செய்து கொள்வோம்.

பாடலில் இடம்பெறும் நில அமைப்பு பாலை.பாலை நிலத்தில் புலவர் ஒரு காட்சியை காண்கிறார். அது கோடைக்காலக் காட்சி. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கோடையின் கொடுமை மட்டுமே தென்படுகிறது. வெவ்வேறு ஊர்களை இணைக்கும் பாதைகளில் ஆள் அரவமற்று இருக்கிறது. காட்டு விலங்குகள் அனைத்தும் கோடை வெப்பத்தின் தாக்குதலுக்கு உட்பட்டு சிறு புதர்களிலும் குத்துச் செடிகளிலும் காய்ந்து போன மரங்களின் கிளை நிழல்களிலும் மறைந்து நின்று இளைப்பாறிக் கொண்டிருக்கின்றன. மரக்கிளைகளில் பறவைக்கூட்டங்களை அதிகம் காண முடியவில்லை. வெயிலின் தகிப்பிலிருந்து அவைகளும் தப்பிக்க முடியவில்லை. தென்படும் சில பறவைகளும் சிறகை விரித்து வைத்துக்கொண்டு உடற்சூட்டைத் தணிக்க முயற்சிக்கின்றன. புற்களோ இலைதழைகளோ இல்லாமல், அவைகளின் காய்ந்து போன சருகுகள் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில கண்ணில் படுகின்றன. தூரத்தில் நோக்கினால் கானல்நீர் கண்ணில் படுகிறது.
            அப்படிப்பட்ட கொடைவாட்டும் பாலைநிலத்தில் சிறு நீர்ச்சுனை ஒன்று கண்ணில் படுகிறது. அந்த நீர்ச்சுனையில் இரு மான்கள் நீரருந்துவதைப் புலவர் பார்க்க நேர்கிறது. அவை இணைமான்கள் என்பதும் தெரிகிறது. இந்நிகழ்ச்சியைக் கண்ட புலவர் பாடலைப் புனைகிறார்.  அவற்றில் பெண்மான் நீரைக் குடித்துக் கொண்டிருக்கிறது. ஆண்மானோ நீரைக் குடிப்பதுபோல் பாவனை மட்டுமே செய்கிறது. இது பெண்மானுக்குத் தெரியவில்லை. ஆண்மான் நீரில் வாய் வைத்திருந்தாலும் அந்த நீரை உறிஞ்சிக் குடிக்கவில்லை, ஏனெனில் இருக்கும் சிறிது நீரைத் தான் குடிக்க விரும்பாமல் மிக மென்மையான, வலிமைக் குறைவாக உள்ள தன் பிணை குடிக்க வேண்டும் என்று விரும்புகிறது.ஆனால் தான் உடன்குடிக்கவில்லை என்றால் பெண்மானும் குடிக்க மறுக்கும் என்பதால்தான், தான் உண்மையில் குடிக்காமல் அவ்வாறு வாயை மட்டும் நீரில் வைத்துக்கொண்டிருக்கிறது.
          இருக்கும் சிறிது நீரையும் இருவரும் குடிக்க வேண்டும் என்று பெண்மான் கருத, வலிமையற்ற மென்மையான பெண்மானுக்குத்தான் நீரின் தேவை அதிகம் என்று ஆண்மான் கருதுகிறது.
          இத்தகைய சிந்தனைத்திறன் மான்களுக்கு இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் புலவர் காதலின் சிறப்பைப் பற்றிக் கூற முற்படுகையில், அக்றிணை உயிர்களிடத்தில் கூட இத்தகைய மேன்மையைப் புகுத்திக் காட்டுவதன் மூலம் உயர்திணை உயிர்களாகிய மக்களிடம் இன்னும் வலிமையாகக் காதலறம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று இலைமறை காயாக உணர்த்துகிறார்.
இத்தகைய காதல் ஒழுக்கம்தான், தியாகம்தான் உண்மைக்காதலரின் கொள்கை, அன்பில் காணக்கிடைப்பது என்று கூறுகிறார் புலவர்.
            காதலுக்கு இத்தகைய இலக்கணம் வழங்கப்பட்டது 1600 ஆண்டுகளுக்கு முன்பு என்பதை கருதுகையில் தமிழரின் மரபு, கலாசாரச்சிறப்பு எத்தனை தொன்மை வாய்ந்தது என்பது தெளிவாக விளங்கும்.
            இந்தப் பாடலில் நம் கவனத்தைக் கவர்ந்த இன்னொரு சிறப்பு, பயின்று வரும் அணி. அது தற்குறிப்பேற்றணி. இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்ச்சியின் மீது, புலவர் தன்னுடைய குறிப்பை ஏற்றிக் கூறுவதால் இதற்கு இப்பெயர். மான்கள் நீரருந்துவது இயற்கை. ஆனால் அவற்றில் பெண்மான் மட்டும் நீரருந்த, ஆண்மான் பாவனை செய்வதாகக் கூறப்பட்டிருப்பது புலவரின் குறிப்பு.

No comments: