Tuesday, December 20, 2016

மௌனசாட்சியும் மரங்களும்...

உலகத்திலேயே வயதான, அனால் உயிருடன் இருக்கும் மரம் எது?!

அந்த மரத்தின் இப்போதைய வயது என்ன இருக்கும்!?!?

மனம்போன போக்கில் இலக்கில்லாமல் கையில் கிடைத்ததை எடுத்து வாசிக்கும் என் கண்ணில் பட்ட ஒரு செய்தி, மேற்கண்ட கேள்விகளுக்குப் பதில் தேடத் தூண்டியது.

சுவீடன் நாட்டில் இருக்கும் ஒரு ஸ்ப்ரூஸ் மரம்தான் மிகஅதிக வயதான மரமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதுதான் அந்த ஸ்ப்ரூஸ் மரம்.
http://newsimg.bbc.co.uk/media/images/44578000/jpg/_44578198_oldesttree226b.jpg

இந்த ஸ்ப்ரூஸ் மரத்தின் வயது கிட்டத்தட்ட 10000.....ஆமாம் பத்தாயிரம் வருடங்கள் இருக்கலாம் என்கிறார்கள். இந்த மரத்தை குளோன் மரம் என்கிறார்கள். அதாவது, தாய்மரம் 600 வருடங்களில் முதிர்ந்து வாடி மடிந்துவிடுமாம்; அனால், அதன் கீழ்கிளைகள் பனியின் கனம் தாங்காமல் வளைந்து தரையைத் தொட, அவற்றிலிருந்தும்.....மண்ணுக்கடியிலிருந்து வேரிலிருந்தும் புதிய தண்டு முளைத்து மீண்டும் மரமாகி வளருமாம்.  இந்தச் செயல்பாடு கடந்த பத்தாயிரம் வருடங்களாக இந்த மரத்தை மறையவிடாமல் உயிரோடு வைத்திருக்கிறதாம். சுவீடனின் டோலானா மாகாணத்தில், ஃபுலு (fulu mountains) மலைகளில் இந்த மரத்தைக் கண்டு பிடித்தவர் Leif Kullmann என்பவர்.

இதற்கு முன்புவரை இந்தப் பெருமையைத் தக்கவைத்துக் கொண்டிருந்தது..... Dr Edmund Schulman என்பவர் 1957ல் கலிபோர்னியாவின் வெள்ளைமலைகளில் கண்டுபிடித்த ஒருவகைப் பைன் மரம்தான். அதற்கு Methuselah எனப் பெயரும் சூட்டினார் அவர். அந்த மரத்தின் வயது..... கிட்டத்தட்ட 4770+ எனக் கணக்கிடப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. இது குளோனிங் ஆகாத மரம்.



இது ஒரு புறமிருக்க...... ஐரோப்பாவிலேயே வயதான மரம் எனும் பெருமையை இப்போது பெற்றிருப்பது.... Pindos mountains எனப்படும் கிரீஸ் நாட்டு மலைப்பகுதியில், Paul J Krusic என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டு அடோனிஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன் வயது கிட்டத்தட்ட 1075 என்று சொல்லப்படுகிறது.
http://www.bbc.co.uk/newsbeat/article/37156471/bosnian-pine-tree-is-europes-oldest-living-thing-at-1075-years-old-say-scientists


இவைதவிர....வேறு பல மரங்களையும் விக்கிபீடியா வரிசைப் படுத்துகிறது.

தூத்துக்குடியில் இருக்கும், சங்ககால பாண்டிய மன்னர்களின் தலைநகராகவும், துறைமுகமாகவும் விளங்கிய கொற்கையில்....2000 வருட வயதுடைய வன்னி மரம் ஒன்று இருப்பதாகவும் கேள்வி.



எதுவுமே பேசாத, உணர்வுகள் இல்லாத, மரங்களுக்கு மட்டும் இத்தனை வருட வாழ்க்கை என்பது, ஆறறிவு உள்ள நமக்கு விடைதெரியாத வினோதமே.

இத்தனை வருட வாழ்க்கையில் எத்தனை மனிதர்களை எத்தனை தலைமுறைகளை இந்த மரங்கள் தாண்டியிருக்குமோ. ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறைக்குச் சொல்லாமலே சென்று விட்ட செய்திகள் இருக்கும்; ரகசியங்கள் பல இருக்கும்; புதைந்துபோன உண்மைகள் பல இருக்கும்; மறைக்கப்பட்டு விட்ட விசயங்கள் இருக்கும்; வரலாற்றிலே மறக்கப்பட்டுவிட்ட, எழுதப்படாத, வாழ்க்கையில் இடம்பெறாத தவறிய எத்தனையோ விஷயங்கள் இருக்கலாம்; அத்தனைக்கும்......இந்த மரங்கள் மௌன சாட்சியாய்.....

No comments: