Tuesday, April 19, 2016

மன்றமா? சங்கமா?

மன்றமா? சங்கமா?

தமிழை முதன்மையாய் வைத்து ஆய்வு செய்யவும், அதனையே நடுவாய்க் கொண்டு நடக்கும் பல முயற்சிகளுக்கும், செயல்களுக்கும், படைப்புகளுக்கும் ஆதாரமாக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்புக்குப்...... பொருத்தமான பெயர் எதுவாய் இருக்கும்?

மன்றமா? சங்கமா?

தமிழ்மன்றமா? தமிழ்ச்சங்கமா?

இன்று இவ்விரண்டு வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று மாற்றாகக் கருதப்பட்டாலும்.... இவை தோன்றிய மூலத்தையும் காலத்தையும் கொஞ்சம் கூர்ந்து நோக்கினால் .... இவை இரண்டுக்குமுள்ள வேறுபாடு விளங்கும்.

சரி. இரண்டும் ஒன்றல்ல. அதனால் இப்போது என்ன கெட்டுவிட்டது ?!....?

ஒன்றும் கெட்டுவிடவில்லை. வெறுமனே தெரிந்து கொள்ளும் முயற்சியில் தெரியவந்த புதிய சில செய்திகள் என்னவென்ற ஒரு சிறு வியப்பு. அவ்வளவே.

டாக்டர்.ந.சுப்பிரமண்யன் அவர்களால் எழுதப்பட்டு, நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தாரால் தரமான புத்தகமாக வெளியிடப்பட்ட, ...." சங்ககால வாழ்வியல்" என்ற புத்தகம், தற்செயலாகக் கையில் கிடைத்து, முதல் சில பக்கங்களைப் படிக்கத் தொடங்கியவுடன், தெரிந்துகொண்ட செய்தி புதிதாகவும் சற்றே வியப்பாகவும் இருந்ததால்.....

தெரிந்துகொண்டது இவைதான்.....

முதலாக.....சங்கம் என்பது....தமிழ்ச்சொல் அல்ல!!!!!!!!!!

இரண்டு...... ஏழாம் நூற்றாண்டு வரை சங்கம் என்ற சொல்லே தமிழில் இல்லை. ஏழாம் நூற்றாண்டுக்குப் பின் திணிக்கப்பட்ட வடமொழிச் சொல்.

1. தொல்காப்பியத்தில் குற்றம் கண்ட அதங்கோட்டாசான் இருந்தது - அவையத்தில். அந்த அவையம் நிலந்தரு திருவிற் பாண்டியனின் ஆட்சியில் செயல்பட்டுவர, அங்கு சமர்ப்பிக்கப்பட்ட படைப்பான தொல்காப்பியத்தைத் தணிக்கை செய்யும் விதமாக அதில் குறைகண்டவர் அதங்கோட்டாசான். அந்தத் தணிக்கை செய்யும் அமைப்பை, பனம்பாரனார் அவையம் என்றுதான் குறிக்கிறார்; சங்கம் என்றல்ல.

2. மதுரைக்காஞ்சி (பத்துப் பாட்டு நூற்களில் ஒன்று) தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அறிவுரை செய்கிறது. எவ்வாறெனில், "அரசே...உன் முன்னோர்களில் நிலந்தரு திருவிற் பாண்டியனையும், பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதியையும் பின்பற்ற வேண்டும்", என்று.

 பாடலில் நிலந்தரு திருவிற் பாண்டியனின் சிறப்பைக் கூறுகையில், " தொல்லானை நல்லாசிரியர், புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின், நிலத்தரு திருவின் நெடியோன்" என்று கூறுகிறது.

இங்கு புலவர்களின் 'புணர்கூட்டு' என்று குறிக்கப்படுகிறதே அன்றி, சங்கம் என்ற சொல் இடம்பெறவில்லை.

3. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் மணிமேகலையில் சங்கம் என்ற சொல்,மதம் சார்ந்த புத்தசங்கத்தைக் குறிக்கிறதேயன்றி, மொழிசார்ந்த தமிழ்ப் புலவர் கூட்டத்தையல்ல.

4. கலித்தொகையில் இடம்பெறும் வார்த்தைகள் கூட, " புலனாவுழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிவாய் சூழ் புனலூர" என்றும், " நிலனாவிற்றிரிதரூஉ நீண்மாடக் கூடலார், புலனாவிற் பிறந்த சொல் புதிதுண்ணும்", என்றும் பதியப்படுகிறது. இங்கு கூட்டு என்றும், கூடல் என்றுமே புலவர்  சேர்க்கை, கூட்டம், தொகை குறிக்கப்படுகிறது; சங்கம் என்று அல்ல.

5.AD.7ஆம் நூற்றாண்டில்தான், சைவ பக்தன்களால் அப்பன் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசன்தான் முதன்முதலில், சங்கம் என்ற சொல்லை, புலவர்கூட்டத்தைக் குறிக்க உபயோகப்படுத்துகிறான். "நன்பாட்டுப் புலவனைச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக்கு அருளினோன்  காண்" என்று திருப்பத்தூர்த் தாண்டகத்தில் சிவனைப் பற்றிப் பாடுகிறான்.

மேலும் பல செய்திகளை நூலின், முதற்பகுதியான-தோற்றுவாய்,  அத்தியாயம்-1ல் 'சங்கம்' என்ற தலைப்பில் தொகுத்துக் கூறுகிறது.

அப்பன் 'சங்கம்' என்ற சொல்லை உபயோகிக்க, சமகாலத்தவனும் சற்றே வயதில் இளையவனுமான சம்பந்தன், "அந்தண் மதுரைத் தொகை ஆக்கினாலும்" என்று ஆலவாய்ப்பதிகத்தில் புலவர்கூட்டத்தைத் தொகை என்று குறிக்கிறான்.

மதுரையில் அமைந்த மொழியாராய்ச்சி செய்ய, புதிய படைப்புகளைப் படைக்க, அவ்வாறு படைக்கப்பட்ட படைப்புகளின் திறனாய்வு செய்ய அமைந்த புலவர்கூடல், நான்மாடக் கூடலென மாற்றப்பட்ட உத்தி சமயக்கணக்கர்தம் கதைகளின்பாற்படும் என்று ஆசிரியர்-ந.சுப்பிரமணியனே கூறுகிறார்.

இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கையில்.....,

தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு அமையும் எந்தவொரு கூட்டத்திற்கும், தமிழ்மன்றம், தமிழ்அவையம், தமிழ்க்கூடல், தமிழர்தொகை என்ற வார்த்தைகளே சிறப்பாகப் பொருந்தும். ஆனால்.....

வடமொழியை உயர்த்திப்பிடிக்கவும், அதனால் ஒப்பீட்டு அளவில் தாய்மொழியைத் தாழ்வாகவும் எண்ணும்படிக் கற்பிக்கப்பட்டு, மிகச்சிறப்பாகக் கற்றுக்கொண்ட தமிழடிமைச் சமூகம், இதனைப்பற்றி அறிந்துகொண்டு...., அறிந்துகொண்டாலும்....,மிக முக்கிய வரலாற்றுப் பின்னணிகொண்ட இந்த வார்த்தைகளைப்  பிரயோகத்தில் நடைமுறையில் கொண்டுவருமா என்பது......சந்தேகம்தான்.

வடமொழி வார்த்தைகளையும் அதனடிப்படையில் அமைந்த வாழ்வியல் நெறிகளையும், சடங்குகளையும், சம்பிரதாயங்களையும், மதம் சார்ந்த எற்றத்தாழ்வுகளையும்  தூக்கிப்பிடிக்கும் எத்தர் கூட்டம், இதனை வரவேற்காது என்பதுமட்டும் உறுதி. :-) அதோடு.....இதனை மறுதலிக்க, 1765 சாக்குப்போக்குகளை, நொண்டிக்காரணங்களைச் சொல்லத்தான் செய்யும்.

வாழ்க தமிழ்!                       வாழ்க தமிழவையம்!!               வளர்க தமிழ்மன்றம்!!

No comments: